11/30/2014

ஒரு முறை உன்னுடன் பேசிடவேண்டும்




ஒரு முறை உன்னுடன் பேசிடவேண்டும் 
மறுபடி கண்களை திறந்திடவேண்டும் 
ஒரு பிடி சோற்றினை உண்டிடவேண்டும் - என்
விரல்களை சூப்பியே கை கழுவிடவேண்டும்

விடை ஒன்று சொல்லுங்கள்

அணையாத தீபத்துக்கு
ஒளியாகி நிற்பவர்களே

கருவூலம் இல்லாமல்
கடவுளான ஆண்டவர்களே

இறப்புக்கே தேதி குறித்து
இயற்கையை வென்றவர்களே

மறுபிறப்பொன்று வேண்டுமென்று
மன்றாடி அழுகின்றோம்

எம் மடிமீது உமைவளர்த்தி
தலை கோத நினைகின்றோம்

ஒரு பிடிசோறு ஊட்டிவிட்டு
உம் தாயாக எண்ணுகின்றோம்

விழி மூடி தூங்கினாலும்
உயிர் வாழும் உருவங்களே

ஒரு முறையேனும் கண்திறந்து
ஒரு வார்த்தை சொல்லுங்களேன்

உமைக்காணும் நினைப்போடு
மலர்கொண்டு வந்துள்ளோம்

உம் கல்லறையை கட்டித்தழுவி
கதறி கதறி அழுகின்றோம்

உம்மோடு பேசுகின்றோம்
உமக்கங்கு கேக்கின்றதா

விண்ணோடு கலந்தவர்களே
விடை ஒன்று சொல்லுங்கள்